ஐ.நா. பொதுச் செயலராக பான் கி மூன் தேர்வு
ஐ.நா. சபையின் 8வது பொதுச் செயலாளராக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. பான் கி மூன், இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்ட 9 பேர் களத்தில் நின்றனர்.
ஆனால் பான் கி மூனுக்கே தொடர்ந்து அதிக ஆதரவு இருந்ததால் சசி தரூர் போட்டியிலிருந்து விலகினார். இதேபோல இலங்கை வேட்பாளர் தனபாலாவும் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து பான் கி மூன் வெற்றி உறுதியானது.
பான் கி மூனின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுச் சபைக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து நேற்று பான் கி மூனை புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பொதுச் சபை தலைவர் ஷேக் ரஷீத் அல் கலிபா கொண்டு வந்தார்.
இதை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து கோபி அன்னான், பான் கி மூனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அன்னான் பேசுகையில், அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியவர் பான் கி மூன். உலகளாவிய கண்ணோட்டத்துடன், நேர்மையாக செயல்படக் கூடியவர் என்று பாராட்டு தெரிவித்தார்.
ஜனவரி 1ம் தேதி பான் கி மூன் ஐ.நா. பொதுச் செயலாளராக பொறுப்பேற்கிறார்.