பாலிவுட் கான்களை பார்க்கும் ஆசையில் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!!
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் பாகிஸ்தானில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பெண்ணை பஞ்சாப் மாநில ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட பெண் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த சல்மான் கான் என்பவரின் மனைவி என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் அடாரி எல்லை வழியாக வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த அந்தப் பெண்ணை ரெயில்வே போலீசார் பரிசோதித்தபோது உரிய பாஸ்போர்ட் இல்லாமல் அவர் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் பகுதிவரை வந்து விட்டது தெரியவந்தது.
உடனடியாக அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்தபோது சுமார் 22 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் உரிய பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு வந்த விபரம் தெரியவந்துள்ளது.
‘என்னை சல்மான் கான், ஷாருக்கானுடன் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். பிறகு, என்னை சுட்டு சாகடித்தாலும் சரி, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பினாலும் சரி’ என்று அடம்பிடித்த அவரை அடாரி எல்லையில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஜலந்தர் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
Average Rating