அருப்புக்கோட்டையில் மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது 17 வயது மகளுக்கும், அருப்புக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்தையா (வயது27) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று அருப்புக்கோட்டை சொக்கலிங்கநகரில் உள்ள சிவன் கோவிலில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. உற்றார்–உறவினர்களும் திரளாக வந்தருந்தனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்துவது குறித்து தகவல் மாவட்ட சமூக நல அதிகாரிகளுக்கு கிடைத்தது.
உடனே அதிகாரிகள் மற்றும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விரைந்து செயல்பட்டு திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்துவது உண்மை என கண்டறியப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் பெண்ணின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை நிறுத்தினர். தொடர்ந்து மைனர் பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
கடைசி நேரத்தில் திருமணம் ரத்தானதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே 10–க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குழந்தை திருமணத்தை நடத்த முயற்சிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating