கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு ஆளான ராமசாமி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சாமியாத்தாள் கணவரிடம் கோபித்து கொண்டு கடுதாம்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராமசாமி மனைவியை குடும்பம் நடத்த பலமுறை சென்று அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும் மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நேற்று மீண்டும் ராமசாமி இரவு 8 மணிக்கு மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது மாமியார் அருக்காணி, மருமகனிடம், நீ குடித்து விட்டு மகளை அடிக்கிறாய்.
எனவே உன்னுடன் இனிமேல் அவள் குடும்பம் நடத்த வரமாட்டாள் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருக்காணியை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து உள்பட உடலின் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார். உடனே ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய ராமசாமியை போலீஸ் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இன்று (புதன்கிழமை) மாலைக்குள் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Average Rating