மன்னாரில் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு விற்பனை
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய, 510 ஏக்கர் காணி தனிநபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த காணி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவின், உவரி, தாழங்காடு, கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி, புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், 510 ஏக்கர் காணியை அபகரித்து, போலி ஆவணங்களை தயாரித்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த காணியில் தமது காணிகளும் உள்ளடங்குவதாக உரிமை கோரி, சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு வந்து முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் காணியை சட்டவிரோதமாக விற்பனை செய்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த குறித்த நபரையும், அதனை விலைக்கு வாங்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரையும் அழைத்து பேச்சு வார்த்தையினை மேற்கொண்டோம்.
இதனைத்தொடர்ந்து கடந்த 16ம் திகதி (16-12-2013) பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டு, சட்டத்தரணி ஊடாக ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஓய்வு பெற்ற வடமாகாண காணி ஆணையாளர் கே.குருநாதன் முன்னிலையில் பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
மன்னார் பிரதேச சபை, சம்பந்தப்பட்ட காணி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
விற்பனை செய்யப்பட்ட குறித்த 510 ஏக்கர் காணியில் அந்தநபர் வேலைத் திட்டங்களை மேற்கொள்ள மன்னார் பிரதேச சபை தடை விதித்துள்ளது.
இவ்வாறு மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.
Average Rating