ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி!! (மகளிர் பக்கம்)
யோகா பயிற்சிகளை முறையாக செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். Journal of neuroscience இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி இருக்கிறது.மூச்சுப்பயிற்சி எந்த விதத்தில் நினைவுத்திறனை மேம்படுத்துகிறது என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வருணிடம் கேட்டோம்…
‘‘தற்போதைய டென்ஷனான வாழ்வியல் சூழலில் உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவது போன்ற பல காரணங்களால் உடலின் சுவாச செயல்பாடுகள் சரிவர நடைபெறுவதில்லை. இதனால் உடலுக்குத் தேவையான பிராணவாயுவில் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, மூளை உள்ளிட்ட அனைத்து உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படைகிறது.
சீரற்ற சுவாசம் இருக்கும்போது மனநிலையில் பதற்றம் ஏற்பட்டு, நமது அன்றாட செயல்களில் தெளிவும், நேர்த்தியும் இருப்பதில்லை. இந்த குழப்பமான சூழலில் நாம் செய்கிற செயல்கள் நமது மூளையில் சரியாக பதிவதும் இல்லை. கொஞ்சம் நுட்பமாகச் சொன்னால், நமது உடலில் இருக்கும் Autonomic Nervous System(ANS) என்ற நரம்பு மண்டலம் அதிக மன அழுத்தத்தால் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனாலேயே மூளையின் செயல்பாடுகள் குறைந்து நினைவாற்றல் மங்குகிறது.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சி மேற்கொள்ளும்போது தேவையான பிராணவாயு நிறைவாகக் கிடைக்கிறது. ANS நரம்பு மண்டலத்துடன் CNS என்கிற Central nervous system நரம்பு மண்டலமும் சீராக செயல்படுகிறது. உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது. மூச்சுப்பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தும் ரகசியம் இதுதான்!’’
Average Rating