சிறீ.ல.சு.க – ஐ.தே.க. இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் இன்று கைச்சாத்து !
சிறீலங்கா சுதந்திரந்திரக் கட்சிக்கும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று நண்பகல் 12.00 மணிக்கு அலரி மாளிகையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வுடன்படிக்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அதன் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேனவும், ஐ.தே.கட்சியின் சார்பில் அதன் செயலாளர் என்.வி.கே. வேரகொடவும் கைச்சாத்திடவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நேற்றிரவு சந்தித்து இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வந்தனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக ஜனாதிபதி இன்று முற்பகல் 11.00 மணிக்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
நேற்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏகமனதான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, தேர்தல் முறைகளில் மாற்றம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புதல் உட்பட ஆறு அம்சத் திட்டத்தில் இவ்விரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.