தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு மன்னர் ஒப்புதல் அளித்தார்
தாய்லாந்து நாட்டில் ராணுவம் ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த ஆட்சிக்கு அந்த நாட்டு மன்னர் பூமிபால் அதுல்யாதேஜ் ஒப்புதல் அளித்து இருக்கிறார். அரசியல் கட்சிகளுக்கு ராணுவ ஆட்சி தடை விதித்து உள்ளது. தாய்லாந்தில் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினாவத்ரா ஐ.நா.சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிïயார்க் நகருக்கு சென்று இருந்தார்.
இந்த நேரத்தில் ராணுவ தளபதி சோந்தி பூன்யாரத்கிளின் கத்தியின்றி, ரத்தமின்றி புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினார். இது தற்காலிக ஆட்சி தான் என்றும் விரைவிலேயே ஜனநாயக ஆட்சி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மன்னர் ஒப்புதல்
ராணுவ ஆட்சிக்கு மன்னர் ஒப்புதல் அளித்து இருக்கிறார். இதற்கான விழா ராணுவ தலைமையகத்தில் நடந்தது. ராணுவ வெள்ளை சீருடையில் சோந்தியும், மற்ற ராணுவ தலைவர்களும் மன்னரின் சிலை அருகில் நின்று இருந்தனர். அப்போது ராணுவ தளபதி சோந்தியை ஆட்சித் தலைவராக அங்கிகரீக்கும் மன்னரின் உத்தரவை ஒரு ராணுவ அதிகாரி படித்தார். அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்னரின் சிலை முன்பு தளபதி சோந்தி முழங்காலிட்டு வணங்கினார்.
ராணுப்புரட்சி நடந்து முடிந்ததும் சோந்தி மன்னரை சந்தித்து அவரது ஒப்புதலை வாய்மொழி மூலமாக பெற்றார். எழுத்து மூலமான அங்கீகாரம் இப்போதுதான் கிடைத்தது. அதற்கான விழாவும் நேற்று தான் நடந்தது. அதை அந்த நாட்டு டி.வி. ஒளிபரப்பியது.
கலவரம் இல்லாததற்கு காரணம்
ராணுவப்புரட்சிக்கு மன்னரின் ஆதரவும், ஆசிர்வாதமும் இருந்ததால் தான் ராணுவத்தளபதி பதவியைக் கைப்பற்றியதும் கலவரம் எதுவும் நடக்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு புதிய ஆட்சியாளர்கள் தடை விதித்து உள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு இது அவசியம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். புதிதாக அரசியல் கட்சிகள் தொடங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பத்திரிகைகள் செய்திகள் வெளியிடுவதற்கும் ஆட்சியாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
ஊழல் விசாரணை
ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்ட தக்ஷின் ஷினாவத்ராவின் ஊழல் நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 9 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட இருக்கிறது. இங்கிலாந்தில் லண்டனில் அவருடைய மகள் தங்கி படித்து வரும் அவரது மகளுடன் தக்ஷின் இப்போது தங்கி இருந்து வருகிறார்.