புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் குழந்தைகளை வளர்ப்போம்: பாகிஸ்தான் பெண்கள் மசூதி முன்பு சபதம்
பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பெண்கள் மசூதி முன்பு கூடி, தங்கள் குழந்தைகளை புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் வளர்ப்போம் என்று சபதம் செய்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளது சிவப்பு மசூதி. இதில் தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து பாகிஸ்தான் அரசுக்கு சவால் விட்டனர். இஸ்லாமிய நெறிப்படியான ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும் எனறு கூறிய மதகுரு அப்துல் அஜீஸ், வீடியோ, மிïசிக் கடைகளை கொளுத்தும்படி தன் ஆதரவாளர்களை தூண்டினார். அவரது சீடர்களான தீவிரவாதிகள் பெண்களை கடத்தினார்கள். அந்த பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்கள். முஷரப் தலைமையிலான அரசாங்கத்தின் ராணுவம் அந்த மசூதியை ஒருவாரத்துக்கும் மேலாக முற்றுகையிட்டது. அதன்பிறகு இந்த மசூதிக்குள் புகுந்தது. அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த மசூதியின் மதகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் முதலாண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது நடந்த பேரணியில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். பர்தா அணிந்த பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் புனிதப்போர் தங்கள் வாழ்க்கை நெறி என்று குரல் எழுப்பினார்கள்.
பேரணியின் முடிவில் இந்த மசூதியில் மதகுருவாக இருந்து கைது செய்யப்பட்ட அப்துல் அஜீஸ் மகள் அனல் கக்க பேசினார். அவர் கூறுகையில், புனிதப்போராளிகள், இஸ்லாமிய சட்டப்படியான ஆட்சியை கொண்டு வருவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்து உள்ளனர். அவர்கள் விட்டுச்சென்ற லட்சியத்தை நிறைவேற்றுவது தான் நம் கடமை என்று குறிப்பிட்டார்.
பெண்கள் சபதம்
புனிதப்போருக்கு நம் குழந்தைகளையும், கணவர்களையும் தயார்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். புனிதப்போருக்காக நம் குடும்பத்தை நாம் திருடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த பெண்கள், நாங்கள் தயார் என்று கூறி முழக்கமிட்டனர். புனிதப்போருக்காக குழந்தைகளை வளர்ப்போம் என்றும் அவர்கள் சபதம் செய்தனர்.
மதகுருவின் மனைவி உம்-இ-ஹாசன் கூறுகையில், தற்கொலை தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் தீவிரவாதிகள் இல்லை. இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்று கூறினார்.
இந்த மசூதியில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியில் ஒரு தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
Average Rating