சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசாங்கம் இப்போதும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளது. எனினும் புலிகள்தான் அதற்கான சமிக்ஞையை முதலில் தெரியப்படுத்த வேண்டும். புலிகள் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தையில் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தால் நோர்வே ஊடாக அரசாங்கத்திற்கு அறிவிக்கலாம். இல்லையேல் அரசாங்கத்தை நேரடியாகவேனும் தொடர்பு கொள்ளலாம். தற்போதைய நிலையிலும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் புலிகளுடன் மட்டுமே இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறாது. ஏனெனில் அவர்கள் மட்டும்தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்லர். எதிர்வரும் காலங்களில் பேச்சுவார்த்தைக்கு புளொட், ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. மற்றும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் அழைக்கப்படுவர். மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றக் கூடாது என்ற புலிகளின் கோரிக்கையை இனிமேல் ஏற்கமுடியாது என்றார் அவர்.
Average Rating