கனடாவில் கல்லூரிக்குள் புகுந்து சுட்டதில் 2பேர் பலி 20 பேர் காயம்
கனடாவில் மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர் சுட்டதில் மாணவர் ஒருவர் பலியானார். போலீசார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம மனிதன்
கனடா நாட்டில் மாண்ட்ரீல் நகரில் உள்ளது டாசன் கல்லூரி. இந்தக்கல்லூரிக்குள் பகல்12.45 மணிக்கு 20 வயதான கோட் அணிந்த ஒருவன் கையில் ஏகே 47 துப்பாக்கியுடன் நுழைந்தான். மாணவர்கள் குழுமி இருக்கும் இடத்துக்கு வந்ததும் அவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான்.
இதனால் பயந்து போன மாணவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் 20வயது உள்ள ஒரு மாணவி பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர்.
சாவு
தாக்குதல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அந்த கொலைகாரன் அங்குஇருந்து ஓடி இன்னொரு கட்டிடத்துக்குள் புகுந்தான். போலீசார் அவனை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுபாய்ந்து அவன் இறந்தான்.
இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இது தீவிரவாத தாக்குதலோ அல்லது இனவெறி தாக்குதலோ இல்லை என்றுபோலீசார் கூறினார்கள்.
இன்னொரு மனிதன்
இந்த சம்பவம் மொத்தம் 20 நிமிடம் நீடித்தது. இந்த சம்பவத்தில் இன்னொரு மனிதனும் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள். சிலர் இன்னொரு மனிதனையும் பார்த்தோம். அவன் அங்கு இருந்து ஓடிவிட்டான் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அருகில் இருந்த மெட்ரோ ரெயில்வே நிலையம் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டது. சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது பற்றியும் கொலைகாரன் யார் அவன் பின்னணி என்ன என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.