ஆலங்குளம் அருகே சிறுவனை கடத்த முயன்ற ஜோதிடர்கள் 2 பேர் கைது…!!
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நடுபூலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மாரிச்செல்வம் (வயது 13). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று இரவு 8 மணியளவில் மாரிச்செல்வம் அந்த பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றுள்ளான். அப்போது அங்கு வந்த 2 பேர் சிறுவனின் வாயில் துணியை வைத்து அடைத்து, கால்களைக்கட்டி அவனை கடத்த முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிச்செல்வம் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றான். அப்போது அந்த வழியாக சிலர் வந்ததால், சிறுவனை விட்டு விட்டு அந்த நபர்கள் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.
அதன் பின்னர் ஊருக்குள் சென்ற மாரிச்செல்வம் தன்னை 2 பேர் கடத்த முயன்றது குறித்து கூறியுள்ளான். இதையடுத்து நடு பூலாங்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு காட்டுப்பகுதிக்குள் அவர்களை தேடிச் சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 2 பேரையும் கிராம மக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். அப்போது அவர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
அவர்கள் 2 பேரும் காலையில் இருந்தே பூலாங்குளத்தில் சுற்றி திரிந்ததும், சிலருக்கு அவர்கள் ஜோதிடம் பார்த்து கூறியதாகவும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள ராயகிரியை சேர்ந்த மாரிமுத்து (40), இசக்கிமுத்து (26) என்பது தெரியவந்தது. சிறுவனை கடத்த முயன்றது ஏன்? என போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் ஜோதிடர்கள் என தெரியவந்தது. இதனால் அவர்கள் சிறுவனை நரபலி கொடுக்கும் நோக்கில் கடத்த முயன்றனரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Average Rating