பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது…!!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சிறுமி வள்ளி (வயது13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சம்பவத்தன்று வள்ளி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவபிரகாசம்(60) என்பவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் வள்ளியிடம் நைசாக பேசி அவளை மோட்டார் சைக்கிளில் வெளியே அழைத்து சென்றார்.
இதனிடையே வீட்டிற்கு வந்த வள்ளியின் பெற்றோர், மகள் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவளை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அரியலூர் பஸ் நிலையத்தில் வள்ளி அழுதவாறு நின்று கொண்டு இருந்தாள். அவளை பொதுமக்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவளிடம் பெற்றோர் விசாரித்த போது, சிவபிரகாசம் வள்ளியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவபிரகாசத்தை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமியை கடத்தி சென்று முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating