வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு!!
நாட்டில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதால் அந்நிறுவனங்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றன.
வாடிக்கையாளர் 59 செகண்டுகள் மட்டும் பேசிய நிலையில் 61 செகண்டுகளாக அதை காட்டி 30 பைசாவுக்கு பதில் 60 பைசாவை சுரண்டும் வேலையை செய்யாததாலும், செல்போனில் பெல் சவுண்ட் மட்டும் கேட்டாலே போதும் என்ற நிலையில், பாட்டு வேண்டுமா, உங்கள் குரல் வேண்டுமா என்று ஜேப்படி வித்தை காட்ட தெரியாததாலும், எளிதான கேள்விக்கு சுலபமாக பதிலளித்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் உயர் ரக செல்போனை பரிசாக தட்டிசெல்லுங்கள் என்று ஏமாற்ற தெரியாததாலும் செல்போன் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன.
இதனால் இண்டெர்நெட் மூலம் வாய்ஸ் கால் பேசுபவர்களிடம் கட்டணம் வசூலிக்க செல்போன் அலைவரிசை சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை(வாய்ஸ் கால்) தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மென்பொருளும் இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் எவருடனும் பேச முடியும். மேற்கண்ட நிறுவனங்களின் சேவை வசதியால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் முறையிட்டு வருகின்றன.
இந்நிலையில் வாய்ஸ் கால் பேக் என்ற புதிய பேக்கை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பேக்கை வாங்கினால் மட்டுமே, ஏர்டெல் சந்தாதாரராக உள்ள ஒருவர் இனி வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்தமுடியும். ஏர்டெல் வழியையே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் பின்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating