வீட்டு மாடியில் இருந்த செல்போன் கோபுரம், எதிர் வீடு மீது விழுந்தது…!!
‘வார்தா’ புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது.
ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர், மணப்பாக்கம், முகலிவாக்கம், நந்தம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள சுமார் 300்்-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் 60-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன.
சாலைகளில் விழுந்த 120-க்கும் மேற்பட்ட மரங்களை மண்டல ஊழியர்கள் அகற்றினார்கள். மரங்களை அகற்றும் பணிகளை ஆலந்தூர் மண்டல மாநகராட்சி கண்காணிப்பு அதிகாரி பூஜா குல்கர்னி, மண்டல உதவி கமிஷனர் செங்கோட்டையன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை சரி செய்து மீண்டும் மின்சாரம் வழங்க 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதம்பாக்கம், ஜீவன் நகரில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் சூறாவளி காற்றில் சரிந்து எதிரில் உள்ள மற்றொரு வீட்டின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
மடிப்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள அம்மா உணவகத்தின் சிமெண்டு ஓடுகள் தூக்கி வீசப்பட்டதால் அங்கு இருந்த உணவுப் பொருட்கள் சேதமடைந்தன.
பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மரங்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட மரங்களும் விழுந்துவிட்டதாகவும், அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating