மன்னாரில் பூரண ஹர்த்தால்….!!
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கொலையினைக் கண்டித்து மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
பூரண ஹர்த்தால் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மீனவர்கள் எவரும் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை.
தனியார் பேரூந்துகள் தமது போக்குவரத்து சேவைகளை முழுமையாக நிறுத்தியுள்ளனர். எனினும் இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்துகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகின்றது.
மேலும், பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. மன்னார் பஸார் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
மன்னாரில் இன்று காலை முதல் மழை பெய்துள்ள நிலையிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதால் அங்கு இயல்பு நிலை முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்த பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தமையும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் முழுமையாக ஆதரவை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating