ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை சட்டத்திற்கு முரணான வகையில் இடைநிறுத்த முடியாது
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை சட்டத்திற்கு முரணான வகையில் இடைநிறுத்த முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்காக இலங்கைப் பிரதிநிதி ரவன்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத்திட்டம் இம்மாத இறுதியில் இடைநிறுத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சலுகைத் திட்டத்தை இடைநிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு இதுவரையில் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும், இடைநிறுத்த உத்தரவினை தடுத்து நிறுத்த இம்மாத இறுதிவரையில் காலஅவகாசம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் விரிசல் ஏற்படாது எனவும் தொடர்ச்சியான உறவுகள் பேணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படாது என ரிவன்த ஆரியசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply